கன்னியாகுமரி:
கன்னியாகுமரியில் இருந்து இன்று பகல் 11 மணிக்கு அரசு பஸ் களியக்காவிளைக்கு புறப்பட்டது. இந்த பஸ்சில் ஏராளமான பயணிகள் இருந்தனர்.
கொட்டாரம் சந்திப்பு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை அருகே பஸ் வந்த போது, எதிரே நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரிக்கு ஒரு மோட்டார் சைக்கிள் வந்தது. அதில் 2 பேர் வந்தனர்.
அந்த மோட்டார் சைக்கிள் மீது எதிர் பாராதவிதமாக அரசு பஸ் மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். சாலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டனர்.
விபத்து குறித்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. படுகாயம் அடைந்த 2 பேரையும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்ப முயன்றனர். ஆனால் அதற்குள் ஒருவர் இறந்து விட்டார். உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மற்றொருவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவரும் இறந்து விட்டார்.
விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதில் பலியானவர்கள் திருப்பதிசாரம் பூங்காநகர் பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன் (வயது 38), ஜான்சன் (47) என தெரிய வந்தது.