வழிப்பறி கும்பலால் தாக்கப்பட்ட பூபாலகிருஷ்ணன். 
உள்ளூர் செய்திகள்

பல்லடம் அருகே இன்ஸ்பெக்டர் மகனை தாக்கி நகை-பணத்தை பறித்த கும்பல்

அவிநாசி பாளையத்தில் இருந்து பல்லடம் நோக்கி நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் பூபாலகிருஷ்ணன் வந்து கொண்டிருந்தார்.பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவில் அருகே வரும்போது ஒருவர் லிப்ட் கேட்டுள்ளார்.

பல்லடம்:

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்தவர் திருமலை ராஜன். இவர் நீலகிரி மாவட்டம் மசினகுடியில் போலீஸ் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் பூபாலகிருஷ்ணன் (வயது 38). இவர் பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் அவிநாசிபாளையம் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் அவிநாசி பாளையத்தில் இருந்து பல்லடம் நோக்கி வந்து கொண்டிருந்தார். பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவில் அருகே வரும்போது ஒருவர் லிப்ட் கேட்டுள்ளார். அதற்காக அவர் வண்டியை நிறுத்தியபோது அங்கு மறைந்திருந்த மேலும் 2 பேர் ஓடி வந்து பூபால கிருஷ்ணனை தாக்கி அங்கிருந்த காட்டுப்பகுதிக்குள் அழைத்து சென்று அவர் அணிந்திருந்த 3 பவுன் தங்க செயின், 13 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறித்து கொண்டு தப்பியோடி விட்டனர்.

இதையடுத்து பூபாலன் பல்லடம் போலீஸ் நிலையம் சென்று புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வழிப்பறியில் ஈடுபட்ட மர்மநபர்கள் யாரென்று விசாரணை நடத்தி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.