விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள பூந்துறையில் செம்மண் குவாரி உள்ளது. இந்த குவாரியில் இருந்து அளவுக்கு அதிகமாக மண் எடுத்ததாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக அமைச்சர் பொன்முடி, அவரது மகன் பொன்.கவுதமசிகாமணி எம்.பி., லோகநாதன் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதைத்தொடர்ந்து அமைச்சர் பொன்முடி மற்றும் 5 பேர் கோர்ட்டில் ஆஜரானார்கள்.
குற்றம் சாட்டப்பட்ட லோகநாதன் ஏற்கனவே இறந்து விட்டார். அமைச்சர் பொன்முடியின் மகன் பொன்.கவுதமசிகாமணி இன்று ஆஜராகவில்லை. அவர் ஆஜராகாததற்காக காரணத்தை அவரது வக்கீல்கள் மனுவாக தாக்கல் செய்தனர்.
தொடர்ந்து வழக்கு விசாரணை நடந்து வருகிறது. மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பூரணி அம்மாள் விசாரணை நடத்தி வருகிறார்.