பூந்தமல்லி:
திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு நகராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளது. இங்கு பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது 8வது வார்டு பகுதிக்கு சென்ற அமைச்சர் அங்குள்ள பூங்காவில் உள்ள விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி உபகரணங்களை ஒவ்வொன்றாக பரிசோதித்து அவரும் பயிற்சி செய்தார். மேலும் பூங்காக்களை நவீனப்படுத்த அருகே உள்ள தனியார் நிறுவனங்களில் சிஎஸ்ஆர் நிதியை பெற்று நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து நகராட்சிகளில் குப்பை அகற்றுதல், குடிநீர் வழங்கல் மற்றும் கால்வாய்களை ஆய்வு செய்தார். ஆய்வின்போது திருவேற்காடு நகர் மன்ற தலைவர் என்.ஈ.கே.மூர்த்தி, நகராட்சி ஆணையர் ரமேஷ், நகரமன்ற துணை தலைவர் ஆனந்தி ரமேஷ், நகராட்சி பொறியாளர் குமார், நகராட்சி ஆய்வாளர் ஆல்பர்ட் அருள்ராஜ் உள்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.