தர்மபுரி:
மாரண்டஅள்ளி அடுத்த கும்மனூர் பஞ்சாயத்து நம்மாண்ட அள்ளி கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு தினமும் ஒருநாள் விட்டு ஒருநாள் ஒகேனக்கல் குடிநீர் மற்றும் ஆள்துளை கிணறு மூலமாக தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது.
தற்போது ஒரு வார காலமாக பஞ்சாயத்து நிர்வாகத்தின் மூலம் தண்ணீர் வழங்கப் படவில்லை. இது சம்பந்தமாக கும்மனூர் பஞ்சாயத்து நிர்வாகத்தில் புகார் அளித்தனர். ஆனால் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்க வில்லை.
இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் இன்றுகாலை காலி குடங்களுடன் குடிதண்ணீர் வழங்காத பஞ்சாயத்து நிர்வாகத்தை கண்டித்து பஞ்சப்பள்ளி-ராயக்கோட்டை முக்கிய சாலையில் அமர்ந்து அவ்வழியாக வந்த சூளகிரி பேருந்தை சிறைபிடித்து 100-க்கும் மேற்பட்டோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த மாரண்டஅள்ளி போலீசார் மற்றும் கும்மனூர் பஞ்சாயத்து நிர்வாகத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
அப்போது சாலைமறியல் செய்தவர்களிடம் குடிநீர் பிரச்சினையை உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனால் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.