சங்கரன்கோவில்:
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் இருந்து திருவேங்கடம் செல்லும் சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்த சாலையில் ஏராளமான கடைகள், ஏ.டி.எம் அறைகள், வணிக வளாகங்கள் உள்ளன.
இந்த சாலையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். ஒன்று உள்ளது. இந்த வங்கியில் நேற்று அதிகாலை ஒருவர் புகுந்துள்ளார். அவர் அங்கிருந்த ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சித்துள்ளார்.
அப்போது அந்த வழியாக ரோந்து சென்ற போலீசார் ஏ.டி.எம்.மில் திருட முயன்றவரை கையும் களவுமாக பிடித்தனர். அவரை சங்கரன்கோவில் டவுன் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரித்தனர்.
அதில், அந்த நபர் சங்கரன்கோவில் காயிதே மில்லத் 4-வது தெருவை சேர்ந்த அஜீஸ்(வயது 41) என்பதும், அவர் மதுபோதையில் இருந்ததும் தெரியவந்தது.
இதுதொடர்பாக தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் மேலாளர் தினகரன் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜீசை கைது செய்தனர். போலீசார் ரோந்து பணியினால் ஏ.டி.எம்.மில் இருந்து பணம் தப்பியது.