பல்லடம்:
கடந்த 2014 முதல் அமல்படுத்தப்படாத நெசவு கூலியை ஜவுளி உற்பத்தியாளர்கள் வழங்கக்கோரி திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் கடந்த 9-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று 25-வது நாளாக போராட்டம் நீடிக்கிறது.
இதன் காரணமாக தினமும் ரூ.60 கோடி அளவுக்கு உற்பத்தி பாதிக்கப்பட்டு வருகிறது. 5 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்து தவித்து வருகின்றனர்.
கூலி உயர்வு தொடர்பாக கோவை தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து கடந்த 24-ந்தேதி பல்லடம் காரணம்பேட்டை நால் ரோட்டில் விசைத் தறியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் திருப்பூர் மாவட்டம் தெக்கலூரில் 9 சங்கங்களை சேர்ந்த விசைத்தறியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 2ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இன்று கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக அறிவித்திருந்தனர். அதன்படி பல்லடம், அவிநாசி, தெக்கலூர் உள்ளிட்ட இடங்களில் விசைத்தறியாளர்கள் தங்களது வீடுகளில் கருப்பு கொடி கட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.