வண்டலூர்:
கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான 3.98 ஏக்கர் நிலம் அதே பகுதியில் உள்ளது.
நிலத்தின் அசல் ஆவணங்களை சிலர் திருடி போலி ஆவணங்களை கம்பெனி பதிவாளர் அலுவலகத்தில் கொடுத்து நிலத்தை அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதுபற்றி அறிந்த அந்த நிறுவனத்தின் அதிகாரிகள் தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜிடம் புகார் செய்தனர். அவரது உத்தரவின் படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் சுமார் ரூ.120 கோடி மதிப்பிலான தனியார் நிறுவனத்தின் நிலத்தை நந்திவரம்-கூடுவாஞ்சேரியை சேர்ந்த சங்கரன், ராமமூர்த்தி ஆகியோர் போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்க முயற்சி செய்வது தெரிந்தது.
இதைத்தொடர்ந்து சங்கரன், ராமமூர்த்தி ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களுக்கு உடந்தையாக இருந்த மேலும் சிலரை போலீசார் தேடி வருகிறார்கள்.