மாமல்லபுரம்:
திருப்போரூர் பகுதியை சேர்ந்தவர் தனுஷ் (வயது 60). இவர் கல்பாக்கம் அருகே உள்ள லத்தூரில் ஆலோபிளாக் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 14-ந் தேதி வேலைக்கு சென்ற இவர் அதன்பிறகு வீடு திரும்பவில்லை.
அதனால் அவரது குடும்பத்தார் சதுரங்கபட்டினம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த நிலையில் இன்று காலை மாமல்லபுரம் அடுத்த பண்டிதமேடு ஓ.எம்.ஆர் சாலையோரத்தில் உயிரிழந்த நிலையில் பைக்கின் அருகே பிணமாக கிடந்தார்.
தகவல் அறிந்த மாமல்லபுரம் போலீசார் விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்து போன தனுஷ், 2 நாட்களாக எங்கே இருந்தார்? குடிபோதையில் விழுந்து இறந்தாரா? விபத்தில் சிக்கி உயிரிழந்தாரா? அல்லது எவரேனும் கொலை செய்து சாலையோரம் கொண்டு வந்து போட்டார்களா? என மாமல்லபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.