கன்னியாகுமரி கடற்கரை 
உள்ளூர் செய்திகள்

கன்னியாகுமரியில் கடல் உள்வாங்கியதால் படகு போக்குவரத்து தாமதம்

கடந்த சில நாட்களாக காலையில் கடல்நீர் மட்டம் தாழ்வதும், நேரம் செல்ல செல்ல கடல்நீர் மட்டம் உயர்வதுமாக காணப்படுகிறது.

மாலை மலர்

கன்னியாகுமரி:

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். இவர்கள் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், அதன் அருகே மற்றொரு பாறையில் உள்ள திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை படகில் சென்று பார்த்துவிட்டு திரும்புவது வழக்கம். இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் சார்பில் தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை படகுகள் இயக்கப்பட்டு வருகிறது.

நேற்று காலையில் வழக்கம் போல் கன்னியாகுமரி கடற்கரையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் கூடி இருந்தனர். அப்போது, திடீரென நீர்மட்டம் தாழ்ந்து கடல் உள்வாங்கியது. கடலுக்கு அடியில் இருந்த பாறைகள் வெளியே தெரிந்தன. கடல் சிறிது தூரத்திற்கு மணற்பரப்பு போல் காட்சியளித்தது. இதனால், காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து தொடங்கவில்லை. பின்னர், 11 மணியளவில் கடல் இயல்பு நிலைக்கு திரும்பியது. அதன்பின்பு 3 மணி நேரம் தாமதமாக படகு போக்குவரத்து தொடங்கியது.

கடந்த சில நாட்களாக காலையில் கடல்நீர் மட்டம் தாழ்வதும், நேரம் செல்ல செல்ல கடல்நீர் மட்டம் உயர்வதுமாக காணப்படுகிறது. நீர்மட்டம் தாழ்வு காரணமாக நேற்று 6-வது நாளாக படகு போக்குவரத்து தாமதமானது குறிப்பிடத்தக்கது.