திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த நுங்கம்பாக்கம் ஊராட்சி சாரதாம்பாள் நகரைச் சேர்ந்தவர் மோகன் ஆல்டிரின், தனியார் கம்பெனி பொறியாளர். இவரது மனைவி பாக்கியவதி. கடம்பத்துார் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து வருகிறார்.
நேற்று காலை கணவன், மனைவி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றுவிட்டனர். தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வரும் இவர்களது மகள் மாலையில் வீட்டுக்கு வந்தபோது முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தாள்.
தகவல் அறிந்ததும் பாக்கியவதி வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு 15 பவுன் நகை மற்றும் ரூ.35 ஆயிரம் மதிப்புள்ள லேப்டாப், இரண்டு செல்போன்கள், பணம் கொள்ளைபோய் இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து மணவாளநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.