குழித்துறை:
குமரி மேற்கு மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பேரூராட்சிகளில் தி.மு.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் தனித் தனியாக களமிறங்கியுள்ளது.
குழித்துறை, கொல்லங்கோடு, பத்மநாபபுரம் நகராட்சிகளிலும் தனித்தனியாக போட்டியிடுகிறார்கள். கொல்லங்கோடு குழித்துறை நகராட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கேரள மாநில தலைவர்களும் தொண்டர்களும் ஆதரவு திரட்டி வருகிறார்கள்.
திருவனந்தபுரம் மேயர் ஆரியா ராஜேந்திரன் நேற்று குழித்துறை, மார்த்தாண்டம், வெட்டுவெண்ணி பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
ஹிஜாப் விவகாரத்தில் மத உரிமைகளையும் தனிமனித சுதந்திரத்தையும், பறிக்கக்கூடாது என்பதுதான் கம்யூனிஸ்டு கட்சியின் நிலைபாடு. கேரளாவில் உள்ள அரசியல் சூழ்நிலை அல்ல தமிழகத்தில், அந்தந்த மாநிலத்திற்கு ஏற்றவாறு அரசியல் நிலைப்பாடு மாறுபடும். தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தனித்து போட்டியிடும் சூழ்நிலை உருவாகி வருகிறது என்றார்.