ஆலந்தூர்:
திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தைச் சேர்ந்தவர் நூர் முகமது(46). இவருக்கு இரண்டு மனைவிகள். இதில் முதல் மனைவியை நூர் முகமது அடித்து, கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது. இதுகுறித்து நூர் முகமது மீது நன்னிலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கடந்த 2019-ம் ஆண்டு மனைவி புகார் அளித்தார்.
இதை அடுத்து போலீசார், நூர் முகமது மீது வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு அழைத்தனர். ஆனால் நூர் முகமது விசாரணைக்கு செல்லாமல், தலைமறைவாகிவிட்டார். மேலும் அவர் வெளிநாட்டுக்கும் தப்பி சென்றுவிட்டார். இந்த நிலையில் குவைத்தில் இருந்து சென்னைக்கு இன்று காலை பயணிகள் விமானம் வந்தது. அதில் பயணம் செய்தவர்களின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை, சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது அதில் நூர் முகமது விமானத்தில் பயணம் செய்து வந்திருப்பதும், அவர் தேடப்படும் தலைமறைவு குற்றவாளி என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து நூர் முகமதுவை அதிகாரிகள் கைது செய்து குடியுரிமை அலுவலகத்தில் உள்ள ஒரு அறையில் வைத்தனர். இதுபற்றி திருவாரூர் மாவட்ட போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.