ஸ்டிரச்சரில் வந்து மருத்துவ காப்பீடு அடையாள அட்டை வாங்கிய மூதாட்டி 
உள்ளூர் செய்திகள்

ஸ்டிரச்சரில் வந்து மருத்துவ காப்பீடு அடையாள அட்டை வாங்கிய மூதாட்டி

கலெக்டர் அலுவலகத்திற்கு மருத்துவ காப்பீடு திட்ட அட்டை பெறுவதற்காக மூதாட்டி ஸ்டிரச்சரில் அழைத்து வரப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மாலை மலர்

கடலூர்:

கடலூர் திருவந்திபுரம் அருகே கே.என். பேட்டையை சேர்ந்தவர் சேஷாச்சலம். இவரது மகள் பேபி (வயது 60). மாற்றுத்திறனாளி. இவர் திருமணமாகாமல் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

கடந்த 2 வாரத்திற்கு முன்பு வீட்டில் வழுக்கி விழுந்ததில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் இவரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதற்கிடையே எக்ஸ்ரே எடுத்து ஆபரேஷன் செய்ய உள்ளதால் அங்கிருந்த மருத்துவர்கள் முதலமைச்சரின் மருத்துவக் காப்பீடு திட்டத்திற்கான அட்டை வாங்கி வரும்படி கூறி உள்ளனர்.

இதையடுத்து அவரது உறவினர்கள் மூதாட்டி பேபியை மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர் அங்கிருந்து காப்பீடு திட்ட அட்டை பெறுவதற்கான ஆராய்ச்சி ஸ்டிரச்சரில் கொண்டு செல்லப்பட்டார்.

இதையடுத்து அங்கிருந்த ஊழியர்கள் 10 நிமிடத்திலேயே காப்பீட்டு திட்டத்திற்கான அட்டையை வழங்கினார். பின்னர் அவர் மீண்டும் ஆம்புலன்சில் சென்றுவிட்டார். கலெக்டர் அலுவலகத்திற்கு மருத்துவ காப்பீடு திட்ட அட்டை பெறுவதற்காக மூதாட்டி ஸ்டிரச்சரில் அழைத்து வரப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.