பலி 
உள்ளூர் செய்திகள்

கூடங்குளம் அருகே படகு கவிழ்ந்து மீனவர் பலி

கடலில் மூழ்கி மீனவர் பலியான சம்பவம் கூடங்குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதி கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

மாலை மலர்

பணகுடி:

நெல்லை மாவட்டம் கூடங்குளம் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் மீன்பிடி தொழில் பிரதானமாக இருந்து வருகிறது. இங்கு ஏராளமான மீனவர்கள் நாட்டுப்படகு மூலம் கடலுக்கு மீன்பிடிக்க செல்வது வழக்கம்.

இன்று அதிகாலை பெருமணல் கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் என்பவரது மகன் ரூபன் (வயது 30) மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் மீன் பிடிப்பதற்காக நாட்டுப்படகில் சென்றுள்ளனர்.

அப்போது கடலில் அதிகமான சீற்றம் ஏற்பட்டு உள்ளது. அப்போது எழுந்த ராட்சத அலையில் ரூபன் உட்பட 4 பேரும் சென்ற நாட்டு படகு கடலில் கவிழ்ந்தது.

இதில் படகில் இருந்த 4 பேரும் கடலில் மூழ்கினர். இதனை பின்னால் வந்த படகில் இருந்தவர்கள் பார்த்து அங்கு விரைந்து சென்றனர். கடலில் மூழ்கிய 4 பேரையும் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது ரூபன் துரதிஷ்டவசமாக கடலில் மூழ்கி பலியானார். மற்ற 3 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

இதுகுறித்து கடலோர காவல் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அங்கு விரைந்து வந்து ரூபன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கடலில் மூழ்கி மீனவர் பலியான சம்பவம் கூடங்குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதி கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.