மகனுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க. நிர்வாகி 
உள்ளூர் செய்திகள்

கடலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மகனுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க. நிர்வாகி

அபகரிக்கப்பட்ட பூர்வீக சொத்தை மீட்டுத்தர கோரி கடலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தந்தை மற்றும் மகன் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மாலை மலர்

கடலூர்:

கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை என்பதால் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து இன்று காலை கடலூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் வழங்கினர்.

இந்த நிலையில் கடலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் 2 பேர் திடீரென்று சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உடனடியாக அவர்களிடம் சென்று இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது. உங்கள் கோரிக்கைகள் தொடர்பாக அதிகாரிகளை சந்தித்து மனு அளிக்க வேண்டும் எனக் கூறி, அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பண்ருட்டி பணிக்கன்குப்பம் சேர்ந்தவர் பழனி என்றும், திமுக முன்னாள் கிளைக் செயலாளராக இருந்துள்ளார் என தெரியவந்தது. இவரது மகன் முருகேசன். இவர்கள்தான் இன்று காலை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தங்களது பூர்வீக சொத்தை அதே பகுதியை சேர்ந்த 3 பேர் ஏமாற்றி எழுதி அபகரித்துக் கொண்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எங்கள் சொத்தை மீட்டு தர வேண்டும் என பழனியும், முருகேசனும் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அதிகாரியிடம் மனு அளித்து விட்டு சென்று விட்டனர்.