ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள வரகுணராமபுரம் பகுதியில் நேற்று இரவு இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதன் காரணமாக அப்பகுதியில் மின்சாரம் தடைபட்டுள்ளது.
இரவு முழுவதும் மின்சாரம் தடைபட்ட நிலையில் இன்று அதிகாலை 4 மணி அளவில் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் வரகுணராமபுரத்தை சேர்ந்த கட்டிடத் தொழிலாளி மாரிமுத்துவின் வீட்டில் அவரது மனைவி வாணி வழக்கம்போல் காலையில் எழுந்தார்.
பின்னர் டீ போடுவதற்காக பிரிட்ஜில் இருந்து பால்பாக்கெட்டை எடுத்துள்ளார். அப்பொழுது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து வாணி தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார். உடனடியாக கணவர் மாரிமுத்து மற்றும் உறவினர்கள் ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தபோது வழியிலேயே உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து கீழராஜகுலராமன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.