தீப்பற்றி எரிந்த எலக்ட்ரிக் பைக். 
உள்ளூர் செய்திகள்

நெல்லையில் இன்று காலை தீப்பிடித்து எரிந்த ‘எலக்ட்ரிக் பைக்’

நெல்லையில் இன்று காலை வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ‘எலக்ட்ரிக் பைக்’ திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

நெல்லை:

நெல்லையை அடுத்த கொண்டாநகரம் கிராமத்தை சேர்ந்தவர் டேனியல் ஆசீர் (வயது 42).

இவர் மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வருகிறார். இவர் தொழில் நிமித்தமாக செல்வதற்கு ‘எலக்ட்ரிக் பைக்’ பயன்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் இன்று காலை வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது ‘எலக்ட்ரிக் பைக்’ திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டில் இருந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றார்.

ஆனாலும் தீ மளமளவென கொளுந்து விட்டு எரியத் தொடங்கியது. இதையடுத்து அவர் பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர்.

இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த ‘எலக்ட்ரிக் பைக்’- ன் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும்.

திடீரென ‘எலக்ட்ரிக் பைக்’ தீப்பிடித்து எரிய காரணம் என்ன? என்று விசாரணை நடந்து வருகிறது.