உள்ளூர் செய்திகள்

இளம்பெண்ணுக்கு இன்ஸ்டாகிராமில் காதல் தொந்தரவு கொடுத்த டிரைவர் கைது

கொரியர் நிறுவனத்தில் வேலை பார்த்த ஞானசுப்பிரமணியன் அந்த பெண்ணிடம் தன் காதலை கூறி தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி வந்துள்ளார். ஞானசுப்பிரமணியன் தொடர்ந்து வற்புறுத்தியதால் பெண், வேலையை விட்டு விட்டு சென்னைக்கு சென்றுவிட்டார்.

நெல்லை:

நெல்லையை அடுத்த பழையபேட்டை பகுதியை சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர் டவுனில் உள்ள ஒரு தட்டச்சு பயிற்சி மையத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இவர் பேட்டை போலீசில் ஒரு புகார் அளித்தார். அந்த புகார் மனுவில் தனது தங்கைக்கு ஒரு இன்ஸ்டாகிராம் ஐடி-யில் இருந்து வாலிபர் ஒருவர் காதலிக்குமாறு வற்புறுத்துவதாகவும், அவரை கண்டறிந்து கைது செய்யவேண்டும் என்றும் கூறியிருந்தார்.

அதன்பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இன்ஸ்டாகிராம் ஐடியை வைத்து மர்மநபரை தேடியதில், அந்த நபர் பாளை போஸ்ட் ஆபீஸ் தெருவை சேர்ந்த கணேசன் என்பவரது மகன் ஞானசுப்பிரமணியன்(வயது 28) என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து நடத்திய விசாரணையில், கடந்த 4 வருடங்களுக்கு முன்பு இளம்பெண்ணின் தங்கை டவுனில் உள்ள ஒரு மருந்து கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.

அப்போது கொரியர் நிறுவனத்தில் வேலை பார்த்த ஞானசுப்பிரமணியன் அந்த பெண்ணிடம் தன் காதலை கூறி தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி வந்துள்ளார். அவர் தொடர்ந்து வற்புறுத்தியதால் அந்த பெண், வேலையை விட்டு விட்டு சென்னைக்கு சென்றுவிட்டார்.

ஆனாலும் அவரை போன் செய்து தொந்தரவு செய்து வந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் குறுந்தகவல்கள் அனுப்பியது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.