கோவளம் கடற்கரையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய டால்பின் மீனை காணலாம் 
உள்ளூர் செய்திகள்

கன்னியாகுமரி அருகே கடற்கரையில் கூட்டம் கூட்டமாக கரை ஒதுங்கிய டால்பின் மீன்கள்

இறந்த நிலையில் கரை ஒதுங்கிய டால்பின் மீனை வனத்துறையினர் மீட்டு அஞ்சுகிராமம் அருகே உள்ள வாரியூர் கால்நடை மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.

மாலை மலர்

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி அருகே உள்ளது கோவளம் கடற்கரை கிராமம். இந்த கிராமம் அரபிக்கடலோரம் அமைந்து உள்ளது. இங்கு உள்ள மீனவர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை.

இந்த நிலையில் கோவளம் கடற்கரையின் கிழக்கு பகுதியில் நேற்று மாலை சுமார் 30-க்கும் மேற்பட்ட டால்பின் மீன்கள் கூட்டம்- கூட்டமாக படையெடுத்த வண்ணம் கரையை நோக்கி வந்தன. இதைப் பார்த்த அந்தப் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடற்கரையில் திரண்டு அதனை வேடிக்கை பார்த்தனர். அப்போது ஒரு டால்பின் மீன் அடிபட்டு காயம்பட்ட நிலையில் உயிருக்கு போராடியபடி கரை ஒதுங்கி கிடந்தது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் பூதப்பாண்டி வனச்சரகர் திலீபன் தலைமையில் மருந்துவாழ்மலை வனக்காப்பாளர்கள் பிரபாகர், அர்ஜுனன் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் பிரவீன் சிவகுமார் ஆகியோர் மீனவர்கள் உதவியுடன் கரை ஒதுங்கி கிடந்த அந்த டால்பின் மீனை மீட்டு ஒரு வள்ளத்தில் கடலுக்குக் கொண்டு சென்று விட்டனர். ஆனால் அந்த டால்பின் மீன் சிறிது நேரத்தில் இறந்த நிலையில் மீண்டும் கரை ஒதுங்கியது.

அந்த டால்பின் மீனை வனத்துறையினர் மீட்டு அஞ்சுகிராமம் அருகே உள்ள வாரியூர் கால்நடை மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு அந்த டால்பின் மீன் கால்நடை மருத்துவர்களால் இன்று பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது.