மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி, தேவாரம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு கால்நடைகள் வளர்க்கப்படுகின்றன. குறிப்பாக நியூட்ரினோ ஆய்வு மையம் பணி நடைபெற்று வரும் அம்பரப்பர் மலையை சுற்றி சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் கிடை அமைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இப்பகுதியில் தெருநாய்களும் அதிகளவு இருப்பதால் ஆடுகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இரவு நேரங்களில் தெருநாய்கள் ஆடுகளை கடித்து குதறுவதால் உயிர்பலி ஏற்பட்டு வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு வெறிநாய்கள் கடித்து 15க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியாகின. இதனிடையே தேவாரம் அருகே தம்மிநாயக்கன்பட்டி தோட்டத்தில் ராசய்யன் மற்றும் அவரது மகன் பகவதிகுமார் ஆகியோர் ஆட்டுக்கிடை அமைத்து ஆடுகளை பராமரித்து வந்தனர். நேற்றிரவு இப்பகுதியில் புகுந்த தெருநாய்கள் ஒரு கிடையில் இருந்த 27 ஆடுகளை கடித்து குதறியதில் பரிதாபமாக உயிரிழந்தன.
இன்று காலையில் ஆடுகள் இறந்துகிடப்பதை பார்த்த பகவதிகுமார் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தேவாரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். மேலும் வருவாய்த்துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து இப்பகுதியில் வெறிநாய்கள் தாக்குதலால் ஆடுகள் பலியாவதை தடுத்து நிறுத்த வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.