திருத்தணி:
திருத்தணி திருவாலங்காடு ஒன்றியம் கிளாம்பாக்கம் ஊராட்சியில் வசிக்கும் ஆதி திராவிடர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வீட்டுமனை பட்டா வேண்டி கடந்த 2018 முதல் திருத்தணி வட்டாட்சியர், கோட்டாட்சியர், உள்ளிட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனையடுத்து நேற்று முதல்வரை நோக்கி பயணம் மேற்கொள்ளப்போவதாக தமிழ் தேசிய கட்சியுடன் இணைந்து கிளாம்பாக்கம் கிராம மக்கள் 100க்கும் மேற்பட்டோர் பேரணியாக புறப்பட்டனர்.
அப்போது வழி மறித்த போலீசார் பேரணி செல்ல உரிய அனுமதி இல்லை என கூறி அனுமதி மறுத்தனர். அப்போது பேரணியில் பங்கேற்ற பெண்கள் வயல்வெளியில் இறங்கி வேறு வழியாக பேரணி செல்ல முற்பட்டனர். இதனால் போலீசாருக்கும், கிராம மக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
சம்பவ இடத்துக்கு வந்த திருத்தணி ஏ.எஸ்.பி., சாய்பிரணீத் தலைமையிலான போலீசார் மற்றும் திருத்தணி தாசில்தார் ஜெயராணி உள்ளிட்டோர் பேரணியாக சென்றவர்களிடம் பேச்சு நடத்தினர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.