உள்ளூர் செய்திகள்

ஊழல் குறித்து பேச பிரதமர் மோடிக்கு தகுதியில்லை- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இந்தியா கூட்டணி உருவானதை பிரதமரால் தாங்க முடியவில்லை. கொடுத்த வாக்குறுதிகள் எதையும் பாஜக நிறைவேற்றவில்லை.

திருவாரூர்:

திருவாரூரில், நாகை எம்.பி. செல்வராஜின் இல்ல திருமணம் நடைபெற்றது. திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். பின்னர் பேசிய அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டை காப்பாற்றிவிட்டோம், இனி இந்தியாவை காப்பாற்ற வேண்டும்.

இந்திய ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும். இந்தியாவை காப்பாற்றவே, இந்தியா கூட்டணி அமைந்துள்ளது. மும்பையில் அடுத்து நடக்க உள்ள கூட்டத்தில் முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும்.

பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை தொடங்கிவிட்டேன். கொடுத்த வாக்குறுதிகள் எதையும் பாஜக நிறைவேற்றவில்லை. மதக்கலவரங்களால் நாட்டை துண்டாக்கும், கொடிய ஆட்சி நடந்து வருகிறது.

இந்தியா கூட்டணி உருவானதை பிரதமரால் தாங்க முடியவில்லை. எங்கு சென்றாலும், திமுக குறித்து பிரதமர் மோடி பேசி வருகிறார். திமுக குறித்து பேசாமல் பிரதமரால் இருக்க முடியவில்லை.

சி.ஏ.ஜி. அறிக்கையால் மத்திய அரசின் 7 விதமான ஊழல் அம்பலமாகியுள்ளது. ஊழல் குறித்து பேச பிரதமர் மோடிக்கு தகுதியில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.