நெல்லை:
நெல்லை டவுன் துப்புரவு தொழிலாளர் காலனியில் ஏராளமானோர் வசித்து வருகிறார்கள். அதன் அருகில் மாநகராட்சிக்கு சொந்தமாக காலியிடம் உள்ளது.
அங்கு துப்புரவு தொழிலாளிகள் 200 குடும்பத்தினருக்கு வீடுகள் கட்டித்தரவேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் அந்த காலி இடத்தில் அங்கன்வாடி கட்டிடம் கட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தெரிகிறது. இதனை அறிந்த துப்புரவு தொழிலாளர்கள் கலைக்கண்ணன் தலைமையில் இன்று காலை அந்த காலி இடத்தில் திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு டவுன் போலீசார் விரைந்து வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்கள்.