சென்னை:
சென்னையில் அசைவ பிரியர்கள் எண்ணிக்கை அதிகம். பிரியாணி கடைகள் மட்டும் சுமார் 40 ஆயிரம் உள்ளன. இது தவிர அசைவ ஓட்டல்கள் தனி.
கடந்த சில நாட்களாக கறிக்கோழி விலை இறக்கை கட்டி பறக்கிறது. ஒரு கிலோ இறைச்சி ரூ.280 முதல் 300 வரை விற்கிறது. கடந்த மாத தொடக்கத்தில் ரூ.220 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
கடுமையான விலை உயர்வு காரணமாக கறிக்கோழி விற்பனையும் சரிந்துள்ளது. இதுபற்றி கறிக்கோழிகள் விற்பனையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் ஞானவேல்ராஜா, நிர்வாக குழு உறுப்பினர் வில்லிவாக்கம் சுரேஷ் ஆகியோரிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-
பொதுவாக கோடைகாலத்தில் கோழி உற்பத்தி குறைவாக இருக்கும். ஆனால் இப்போது கோழி தீவன விலை கிலோவுக்கு ரூ.10 அதிகரித்துள்ளது. கோழி குஞ்சுகள் விலையும் 15 சதவீதம் வரை உயர்ந்து இருக்கிறது.
மேலும் பராமரிப்பு செலவு, கூலி உயர்வு போன்ற காரணங்களால் விலை உயர்ந்துள்ளது. விலை அதிகமாக இருப்பதால் கோழி இறைச்சி வாங்குபவர்கள் மீன் போன்ற இதர அசைவ உணவுக்கு மாறி வருகிறார்கள். இதனால் கறிக்கோழி விற்பனையும் சரிந்துள்ளது.
சென்னையை பொருத்தவரை தினமும் 10 டன் கறிக்கோழி விற்பனையாகும். இப்போது 15 சதவீதம் வரை விற்பனை சரிந்துள்ளது.
கறிக்கோழிகள் பருவத்துக்கு வர 45 நாட்கள் ஆகும். எனவே வரும் நாட்களில் உற்பத்தி அதிகரிக்க அதிகரிக்கத்தான் விலையும் குறைய வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.