வழக்கு 
உள்ளூர் செய்திகள்

மருத்துவ ஆவணங்களை திருத்திய அரசு டாக்டர் உள்பட 3 பேர் மீது வழக்கு

மருத்துவ ஆவணங்களை திருத்தியதாக அரசு டாக்டர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மாலை மலர்

ஆண்டிபட்டி:

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள நூத்துலாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 40). இவரது மனைவி பிரபா (35). இவர் பித்தப்பை கல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் கடந்த 2008ம் ஆண்டு அனுமதிக்கப்பட்டார்.

உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருக்கு எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததால் உறவினர்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் வீட்டுக்கு வந்த சில நாட்களிலேயே பிரபா உயிரிழந்தார்.

தனது மனைவிக்கு எந்தவிதமான சிகிச்சைகள் அளிக்கப்பட்டது என்று ராஜேந்திரன் மருத்துவக்கல்லூரியிடம் கேட்டார். ஆனால் அந்த ஆவணங்களை நிர்வாகம் வழங்க மறுத்தது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் மனு அளித்தபோதும் ஆவணங்களை வழங்க மறுத்த நிலையில் ராஜேந்திரன் மாநில பொது தகவல் ஆணையத்திடம் மேல்முறையீடு செய்தார்.

மருத்துவ ஆவணங்களை வழங்க ஆணையம் உத்தரவிட்ட நிலையில் 33 பக்க சிகிச்சை ஆவணங்கள் ராஜேந்திரனுக்கு வழங்கப்பட்டன. அதில் 17 மற்றும் 24-வது பக்கங்களில் சிகிச்சைக்கான ஆவணங்களில் திருத்தம் செய்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் தனது மனைவி இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரேவிடம் புகார் அளித்தார்.

இதனையடுத்து க.விலக்கு போலீசார் மருத்துவ ஆவணங்களை திருத்திய அரசு டாக்டர் கண்ணன், செவிலியர்கள் ஹேமா, விஜயசித்ரா ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.