கைது 
உள்ளூர் செய்திகள்

நெல்லை அருகே 2-வது திருமணம் செய்த கார் டிரைவர் கைது

நெல்லை அருகே முதல் மனைவி இருக்கும் போது 2-வது திருமணம் செய்த கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை:

நெல்லை அருகே உள்ள சீதபற்பநல்லூரை அடுத்த வல்லவன்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் நெல்லையில் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

இவரது மனைவி மாரியம்மாள் (வயது27). கடந்த சில மாதங்களாக ஆறுமுகம் வீட்டிற்கு நேரத்திற்கு வராமல், காலதாமதமாக வந்துள்ளார். சில நாட்கள் வெளியூர் வேலைக்கு சென்று விட்டதாக கூறி வீட்டிற்கு வராமலும் இருந்துள்ளார்.

இதில் சந்தேகம் அடைந்த மாரியம்மாள், கணவரின் நடவடிக்கைகளை கவனித்த போது அவர் மற்றொரு பெண்ணுடன் பேசி பழகுவது தெரியவந்தது. மேலும் அந்த பெண்ணை 2-வதாக திருமணம் செய்து அந்த பெண்ணுடனும் அவர் குடும்பம் நடத்தி வந்ததும் மாரியம்மாளுக்கு தெரிய வந்தது.

இதனால் ஆத்திரம் அடைந்த மாரியம்மாள் கணவர் ஆறுமுகத்துடன் தகராறு செய்து கண்டித்தார். அப்போது ஆறுமுகம் மாரியம்மாளை சரமாரி அடித்து உதைத்துள்ளார்.

இதுகுறித்து அவர் சீதபற்பநல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, 2-வது மனைவி சுபாஷினியுடன் குடும்பம் நடத்திய ஆறுமுகத்தை கைது செய்தனர்.

முதல் மனைவி இருக்கும் போது 2-வது திருமணம் செய்தது செல்லாது என்பதால் சுபாஷினியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.