போரூர்:
பாடி பகுதியை சேர்ந்தவர் ராபர்ட் பெல்லார்மின் (வயது 45).என்ஜினீயர்.இவரது மகள் சகாய ஏஞ்சலின் ஷாலினி. கல்லூரி மாணவி.
இன்று காலை 8 மணியளவில் ராபர்ட், தனது மகள் ஷாலினியை பழைய மகாபலிபுரம் சாலை காலவாக்கத்தில் உள்ள கல்லூரியில் விடுவதற்காக காரில் அழைத்து சென்றார்.
மதுரவாயல் பைபாஸ் சாலையில் வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த கார் திடீரென எதிர்பாராத விதமாக முன்னால் இரும்பு கம்பிகளை ஏற்றி சென்று கொண்டிருந்த லாரி மீது வேகமாக மோதியது.
இதில் லாரியின் பின்பக்கம் நீட்டிக்கொண்டிருந்த இரும்பு கம்பிகள் காரின் கண்ணாடியை உடைத்துக்கொண்டு ராபர்ட்டின் கழுத்து, நெஞ்சில் குத்தியது. இதில் அவர் ரத்த வெள்ளத்தில் கார் இருக்கையில் இருந்தபடியே சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதனை கண்டு அருகில் அமர்ந்து இருந்த அவரது மகள் சகாய ஏஞ்சலின் ஷாலினி அலறி துடித்தார்.
தகவல் அறிந்ததும் கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து வந்து ராபர்ட்டின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து தொடர்பாக அம்பத்தூர் பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் சத்தியராஜ் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.