சென்னை:
திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்துக்கு நேற்று இரவு 7.30 மணி அளவில் அடையாளம் தெரியாத சுமார் 52 வயது ஆண் ஒருவர் வந்தார். அவர் குற்றப்பிரிவு ஆய்வாளர் கலைச்செல்விக்கு பரிசு பொருள் கொடுப்பதற்காக வந்துள்ளதாக தெரிவித்தார்.
ஆய்வாளர் இல்லாததால் காவல் நிலையத்தில் பணியில் இருந்த போலீசாரிடம் அந்த பெட்டியை கொடுத்துவிட்டு சென்றார்.
பின்னர் காவல் நிலையத்துக்கு வந்த இன்ஸ்பெக்டரிடம் பெட்டி பற்றி போலீசார் தெரிவித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி திருவல்லிக்கேணி உதவி கமிஷனர் பாஸ்கரிடம் தகவல் தெரிவித்தார்.
அவரது அறிவுறுத்தலின் பேரில் பரிசு பெட்டியை ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. அதில் வெடிகுண்டு ஏதும் இருக்குமோ என்ற சந்தேகத்தால் காவல் நிலையத்தில் வெடிகுண்டு பீதி நிலவியது.
இதையடுத்து அந்த பெட்டியை ஆய்வு செய்வதற்காக சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதி அருகே உள்ள மைதானத்திற்கு எடுத்து சென்றனர். மோப்ப நாய் உதவியுடன் பெட்டியை சோதனை செய்து பார்த்த போது அதில் முந்திரிப் பருப்பு மற்றும் சாக்லேட் இருந்தது.
இதன்பிறகே போலீசார் நிம்மதி பெருமூச்சு விட்டனர். பரிசு பெட்டியை கொடுத்து விட்டு சென்றவர் யார் என்பது பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது.