ஆவடி:
ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட 48-வது வார்டு எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் உள்ள குளக்கரையில் 20 ஆண்டுகளாக வசிக்கும் மக்களின் 17 வீடுகளை நீதிமன்ற உத்தரவின் பேரில் அகற்ற முடிவு செய்யப்பட்டது.
அதன்படி இன்று 100-க்கும் மேற்பட்ட போலீசார், தீயணைப்புதுறை உதவியுடன் வீடுகளை இடிக்கும் பணியில் ஆவடி வருவாய்த் துறையினர் ஈடுபட்டனர்.
ஏற்கனவே வீடுகளை காலி செய்ய 3 நாள் அவகாசம் வழங்கபட்ட நிலையில் மாற்று இடம் வழங்க கோரியும் வீடுகளை இடிக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தும் பொதுமக்கள் திடீரென திருவேற்காடு அயப்பாக்கம் சாலையில் 100-க்கும் மேற்பட்டோர் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
உடனே மறியலில் ஈடுபட்ட பெண்கள், சிறுவர்கள் ஆண்கள் என அனைவரையும் அப்புறப்படுத்தினார்கள். மேலும் 19 பேரை போலீசார் கைது செய்து பஸ்சில் அழைத்துச் சென்றனர். இவர்கள் மீது அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்த சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.