உள்ளூர் செய்திகள்

சேலத்தில் கைது செய்யப்பட்ட நர்சுகள் மீண்டும் போராட்டத்தில் குதித்தனர்

கொரோனா பெருந்தொற்று காலத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் பணி செய்ய நர்சுகளுக்கு தற்காலிக பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.கொரோனா தொற்று காலத்தில் தன்னலம் பாராமல் அனைவரும் பணிபுரிந்தோம்.

சேலம்:

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் பணி செய்ய நர்சுகளுக்கு தற்காலிக பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.அதன்படி, ரூ.14 ஆயிரம் மாத சம்பளத்தில் சுமார் 6 ஆயிரம் நர்சுகள் தற்காலிகமாக நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு டிசம்பர் மாதம் 31-ந் தேதியுடன் பணி முடிந்துவிட்டது என்றும், அதன் பிறகு பணி நீட்டிப்பு வழங்கப்படாது என்றும் நேற்று முன்தினம் சுகாதாரத்துறை அறிவித்தது.

இந்த நிலையில் சேலம் அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா தொற்று காலத்தில் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட சுமார் 100-க்கும் மேற்பட்ட நர்சுகள் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் மீண்டும் பணி வழங்கக்கோரி கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் நர்சுகள் யாரும் அங்கிருந்து கலைந்து செல்லவில்லை.

இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட நர்சுகளிடம் சுகாதாரத்துறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இதனால் கலெக்டர் அலுவலகம் எதிரில் சாலையோரம் நர்சுகள் அனைவரும் அமர்ந்து இரவு வரை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 105 நர்சுகளை இரவில் போலீசார் கைது செய்தனர். பின்னர் கோட்டையில் உள்ள மண்டபத்தில், அவர்களை அடைத்தனர்.

இதையடுத்து அவர்களை காலையில் போலீசார் விடுவித்தனர். ஆனால் அவர்கள் எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை யாரும் இங்கிருந்து செல்லமட்டோம் என கூறினர். மேலும் அவர்கள் கூறும்போது:- தற்காலிகமாக நியமிக்கப்பட்ட எங்களை மீண்டும் ஒப்பந்த அடிப்படையில் பணியில் சேர்க்க வேண்டும். கொரோனா தொற்று காலத்தில் தன்னலம் பாராமல் அனைவரும் பணிபுரிந்தோம். சுகாதாரத்துறையில் காலியாக உள்ள நர்சுகள் பணியிடங்களில் எங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றனர்.இதனால் கோட்டை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.