குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் மாநகராட்சி 43-வது வார்டு சி.கே.சி.எம் காலனியில் காளியம்மன் கோவில் உள்ளது. இப்பகுதியில் 1000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தினசரி கோவிலில் வழிபாடு நடத்தி வருகின்றனர்.
கடந்த 15 வருடங்களாக புதுப்பிக்கப்படாமல் இருந்த கோவில் தற்போது புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த ஜூலை மாதம் 6-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அதன்பின்னர் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அலங்காரம் செய்யப்பட்டது. அதனைதொடர்ந்து அப்பகுதி மக்கள் தொடர்ந்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.
நேற்று பூஜை முடிந்ததும் கோவிலை பூட்டிச்சென்றனர். இன்று அதிகாலை கோவிலில் புகுந்த மர்மநபர்கள் அம்மனின் கிரீடம் மற்றும் இடதுகையை சேதப்படுத்தி சென்றனர். சிலை உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் நகர் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அதில் இன்று காலை சம்பவம் நடைபெற்றது தெரியவந்துள்ளது.
மேலும் அருகில் இருந்த உண்டியலில் குறைந்த அளவே பணம் இருந்துள்ளது. எனவே பணம் கிடைக்காத ஆத்திரத்தில் சிலையை உடைத்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் சந்தேகிக்கின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளனர். மேலும் கைரேகை தடயங்களையும் பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
கோவிலில் இருந்த மின்பெட்டியையும் சேதப்படுத்தி அதிலிருந்த பியூஸ் கட்டையை எடுத்து மின்வினியோகத்தை துண்டித்த பின்னர் கைவரிசையை காட்டியுள்ளனர். எனவே அந்த கோணத்திலும் போலீசார் விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர்.
அதிகாலையில் நடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.