ஆலந்தூர்:
சென்னையில் இருந்து இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலத்திற்கும் மற்றும் உள் மாநிலத்திற்குள்ளும் தினசரி புறப்பாடு 200 விமானங்கள், வருகை 200 விமானங்கள் என 400க்கும் மேற்பட்ட விமானங்கள் வந்து செல்கின்றன.
இந்த நிலையில் விமானத்தில் பயன்படும் எரிபொருள் விலை சுமார் 18 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது. இதன் காரணமாக சென்னையில் இருந்து மற்ற மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் முக்கிய பகுதிகளுக்கு செல்லும் விமான கட்டணம் அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்து டெல்லி செல்ல முன்பு ரூ.8 ஆயிரம் விமான கட்டணமாக வசூலிக்கப்பட்டது. தற்போது இது ரூ.10 ஆயிரமாக அதிகரித்துள்ளது.
இதேபோல் பெங்களூருக்கு ரூ.4500 முதல் ரூ. 5 ஆயிரம் வரையும், மும்பைக்கு ரூ.7500 முதல் ரூ.9 ஆயிரம் வரையும், ஐதராபாத்துக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.6500 வரையும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளன.
மதுரைக்கு ரூ.4500 முதல் ரூ.6 ஆயிரம், திருச்சிக்கு ரூ.3300, கோவை, தூத்துக்குடிக்கு ரூ.4500 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்த விமான கட்டண உயர்வுக்கு காரணம் எரிபொருள் விலை அதிகரிப்பு என்று கூறப்படுகிறது.
இந்த கட்டணம் உயர்வு நடுத்தர விமான பயணிகளை கடுமையாக பாதித்து உள்ளது. மேலும், கடைசி நேரத்தில் பயணம் செய்பவர்கள் பயணம் செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்னும் 2 வாரத்திற்கு பின்பற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.