திருவெற்றியூர்:
திருவொற்றியூர் பாலகிருஷ்ணா நகரைச் சேர்ந்தவர் கோகுல கிருஷ்ணன் (வயது 28). அ.தி.மு.க. மேற்கு பகுதி மாணவரணி செயலாளரான இவர் சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாகவும் உள்ளார்.
இவரும் அதே பகுதியைச் சேர்ந்த 24 வயது பட்டதாரி இளம்பெண் ஒருவரும் காதலித்து வந்ததாக தெரிகிறது. அந்த இளம்பெண் ஓ.எம்.ஆர்.சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில மாதங்களாக அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் அந்த இளம்பெண் கோகுலகிருஷ்ணனுடன் பழகுவதை தவிர்த்தார். அவரிடம் பேசவில்லை என்று தெரிகிறது.
இதனால் கோபம் அடைந்த கோகுல கிருஷ்ணன் கடந்த 21-ந்தேதி காலை வீட்டில் இருந்து வெளியே வந்த இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி கடத்தி சென்றார். இதுகுறித்து பெண்ணின் பெற்றோர் சாத்தாட்காடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
எண்ணூர் போலீஸ் உதவி கமிஷனர் பிரம்மானந்தம் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் நந்த குமார் மற்றும் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது கோகுலகிருஷ்ணன் திருமணம் செய்வதற்காக இளம்பெண்ணை பாண்டிச்சேரியில் உள்ள ஒட்டலில் கடத்தி வைத்திருந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் பாண்டிச்சேரிக்கு விரைந்து சென்று இளம்பெண்ணை மீட்டனர். மேலும் கோகுலகிருஷ்ணனை கைது செய்து சாத்தாங்காடு போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.
இதில் இளம்பெண்ணின் விருப்பம் இல்லாமல் கட்டாயப்படுத்தி திருமணம் செய்வதற்காக பாண்டிச்சேரிக்கு கோகுல கிருஷ்ணன் கடத்தி சென்றது தெரிந்தது. இதைத்தொடர்ந்து கோகுல கிருஷ்ணன் மீது போலீசார் ஆள்கடத்தல் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துசிறையில் அடைத்தனர்.