உள்ளூர் செய்திகள்

வேலூர் மாநகராட்சி கூட்டரங்கில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்

அதிமுக கவுன்சிலர்கள் செல்போன் வெளிச்சத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.மாநகராட்சி கூட்டத்தில் கொண்டு வந்த தீர்மானத்திற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என அ.தி.மு.க கவுன்சிலர் கூறினர்.

Suresh K Jangir

வேலூர்:

வேலூர் மாநகராட்சி அவசர கூட்டம் மேயர் சுஜாதா தலைமையில் இன்று நடந்தது. கமிஷனர் அசோக்குமார், துணை மேயர் சுனில் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கிராமங்கள்போல மாநகரப் பகுதியில் பகுதி சபா அமைக்க உத்தரவிட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனை தொடர்ந்து வேலூர் மாநகராட்சி பகுதியில் உள்ள 60 வார்டுகளிலும் 419 பகுதி சபா அமைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக மேயர் அறிவித்தார். உடனடியாக கூட்டம் நிறைவடைந்தது.

அப்போது அ.தி.மு.க கவுன்சிலர்கள் இன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என கோஷம் எழுப்பினர்.

அங்கிருந்து மேயர் துணை மேயர் கமிஷனர் ஆகியோர் வெளியே சென்றனர். அதிமுக கவுன்சிலருக்கு எதிராக திமுக கவுன்சிலர்கள் சிலரும் பேசினர். இதனால் கூட்ட அரங்கில் பரபரப்பு ஏற்பட்டது.

அதிமுக கவுன்சிலர்கள் எழிலரசன், ரமேஷ், சரவணன், அஸ்மிதா, அமல நிருபா, அருணா விஜயகுமார், ராஜேஸ்வரி சோமு மற்றும் பாஜக கவுன்சிலர் சுமதி மனோகரன் ஆகியோர் கூட்ட அரங்கில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களை உடனடியாக வெளியேற வேண்டுமென மாநகராட்சி ஊழியர்கள் கேட்டுக்கொண்டனர்.

அவர்களை தனது அறைக்கு வருமாறு அழைத்தார். ஆனால் அவர்கள் கூட்டம் அரங்கில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் அதுவரை வெளியேற மாட்டோம் என தெரிவித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து கூட்ட அரங்கில் இருந்த மின்விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டது.

இதனால் அதிமுக கவுன்சிலர்கள் செல்போன் வெளிச்சத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாநகராட்சி கூட்டத்தில் கொண்டு வந்த தீர்மானத்திற்கு விளக்கம் அளிக்க வேண்டும்.

கூட்டத்தில் விளக்கம் கூட அளிக்காமல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது எந்த வகையில் நியாயம் என அ.தி.மு.க கவுன்சிலர் கூறினர்.