உள்ளூர் செய்திகள்

குளித்தலை அருகே மின்சாரம் தாக்கி 6 வயது சிறுமி பலி

தண்ணீர் சூடான பிறகு மின்சார ஸ்விட்ச் ஆப் செய்தனர். சிறுமி சுபிக்‌ஷா வாட்டர் ஹீட்டரை கையில் எடுத்தார்.

குளித்தலை:

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே சிவாயம் ஊராட்சிக்கு உட்பட்ட சிவாயம் தெற்குத் தெருவை சேர்ந்தவர் ரங்கசாமி. இவரது மனைவி பார்வதி. இவர்களது குழந்தைகள் தருண்(வயது 12 ), நித்திஷ்(8), சுபிக்ஷா(6). ரங்கசாமியும், பார்வதியும் கூலி வேலை செய்து குழந்தைகளை படிக்க வைத்து வாழ்ந்து வருகின்றனர்.

சுபிக்ஷா 2-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் இன்று காலை வீட்டில் உள்ள குளியலறையில் குளிப்பதற்காக வாட்டர்ஹூட்டரை பக்கெட்டில் வைத்து தண்ணீரை சுட வைத்துள்ளனர்.

தண்ணீர் சூடான பிறகு மின்சார ஸ்விட்ச் ஆப் செய்தனர். இந்நிலையில் சிறுமி சுபிக்ஷா வாட்டர் ஹீட்டரை கையில் எடுத்தார். அப்போது வாட்டர் ஹீட்டரில் இருந்து மின்சாரம் தாக்கியது. இதில் சுபிக்ஷா குளியலறையிலேயே மயங்கி கிடந்தார்.

இதனை பார்த்த பெற்றோர்கள் உடனடியாக குழந்தையை வெளியே எடுத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் குளித்தலை மாவட்ட அரசு தலைமை மருத்து வமனைக்கு கொண்டு வந்து சிகிச்சைக்காக சேர்ந்தனர்.

சோதனை செய்த மருத்துவர் சுபிக்ஷா ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். தகவலை குளித்தலை காவல் நிலையத்திற்கு தெரிவித்து குளித்தலை போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனையில் வைத்துள்ளனர். சிறுமி மின்சாரம் தாக்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT