மேட்டூர்:
மேட்டூர் அருகே நங்கவள்ளி வீரக்கல் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி சிவலிங்கம். இவருடைய மகள் ரேவதி (வயது 20), மகன் சிவஸ்ரீ (10).
அதே பகுதியை சேர்ந்த முனுசாமி மகள் திவ்யதர்ஷினி (14). இவர்கள் 3 பேரும் அப்பகுதியில் உள்ள கொத்தி குட்டை ஏரியில் இன்று காலை துணிகள் துவைக்க சென்றனர். துணி துவைத்து முடித்த பிறகு 3 பேரும் தண்ணீரில் குளித்து விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற 3 பேரும் நீச்சல் தெரியாததால் ஒருவர் பின் ஒருவராக நீரில் மூழ்கினர்.
3 பேரும் நீரில் மூழ்கியதை கண்ட அக்கம் பக்கத்தினர் ஏரியில் இறங்கி தேடினர். இருப்பினும் காப்பாற்ற முடியவில்லை. 3 பேரும் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். 3 பேர் உடலை ஏரியில் இருந்து மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அவர்களின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுததை பார்க்கும்போது பரிதாபமாக இருந்தது.
இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நங்கவள்ளி போலீசார், குழந்தைகளின் உடலை கைப்பற்றி பிரிதே பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏரியில் மூழ்கி 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.