உள்ளூர் செய்திகள்

மான்களை வேட்டையாடி சமைத்து ஓட்டலில் விற்பனை செய்த 3 பேர் கைது

ஓட்டலில் மான் கறி விற்பனை செய்வதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. ஓசூர் வனக்கோட்ட வனகாப்பாளர் கார்த்திகேயனி விசாரணை நடத்தினார்.

Suresh K Jangir

தேன்கனிக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ளது குள்ளட்டி வனப்பகுதி. இப்பகுதியை ஒட்டி தனியாருக்கு சொந்தமான ஓட்டல் ஒன்று உள்ளது.

இந்த ஓட்டலில் கேரளாவை சேர்ந்த பிரசாந்த் (வயது 43) என்பவர் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். குடிசலூரை சேர்ந்த மல்லப்பா மகன் மல்லேசன் (32) மற்றும் மாதேஷ் (32) ஆகியோரும் இந்த ஓட்டலில் வேலை பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் அந்த ஓட்டலில் மான் கறி விற்பனை செய்வதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஓசூர் வனக்கோட்ட வனகாப்பாளர் கார்த்திகேயனி விசாரணை நடத்தினார்.

அப்போது, பிரசாந்த் உள்ளிட்ட 3 பேரும் வனப்பகுதியில் மான்களை வேட்டையாடி ஓட்டலில் சமைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.

இதைதொடர்ந்து தேன்கனிக்கோட்டை வனச்சரகர் முருகேஷ் மற்றும் வனத்துறையினர் அந்த தனியார் ஓட்டலுக்கு சோதனையிட சென்றனர்.

அப்போது வனத்துறையினரை கண்டதும் மேலாளர் உள்பட 3 பேரும் மான் இறைச்சியை அவசர, அவசரமாக மண்ணில் குழி தோண்டி புதைத்துள்ளனர்.

உடனே வனத்துறையினர் பிரசாந்த் உள்பட 3 பேரையும் கைது செய்தனர். குழி தோண்டி புதைக்கப்பட்ட மான் இறைச்சியை பரிசோதனைக்காக எடுத்து சென்றனர்.

கைதான 3 பேருக்கும் தலா ரூ.40 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.