கொளத்தூர்:
சென்னை ராஜமங்கலம் செந்தில் நகர் பகுதியில் வசித்து வருபவர் கிருஷ்ணா (42). தனியார் நிறுவனத்தில் கெமிக்கல் என்ஜினீயராக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 26-ந் தேதி குடும்பத்துடன் சொந்த ஊரான கேரளாவுக்கு சென்றார்.
இந்த நிலையில் இவரது வீட்டில் வேலை செய்து வந்த கண்மணி என்பவர் நேற்று மாலை கிருஷ்ணா வீட்டருகே வந்தபோது வீட்டின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் கிருஷ்ணாவின் மனைவி பிந்தியாவுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார். கண்மணி வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 28 சவரன் நகைகள் திருடப்பட்டது தெரியவந்தது.
இது குறித்து ராஜமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.