உள்ளூர் செய்திகள்

தளி அருகே டிராக்டர் டிரைவரை அரிவாளால் வெட்டிய 2 பேர் கைது

முருகேசன் மற்றும் நாகராஜ் ஆகிய 2 பேரிடம் மஞ்சுநாத் கடந்த சில நாட்களுக்கு முன்பு தகராறில் ஈடுபட்டார்.மஞ்சுநாத் தளி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே கல்லுபாலம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி. இவரது மகன் மஞ்சுநாத் (வயது21).

டிராக்டர் டிரைவரான இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த முருகேசன் (39), நாகராஜ் (27) ஆகியோர் சேர்ந்து நடத்தி வந்த நர்சரி கார்டனில் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் முருகேசன் மற்றும் நாகராஜ் ஆகிய 2 பேரிடம் மஞ்சுநாத் கடந்த சில நாட்களுக்கு முன்பு தகராறில் ஈடுபட்டார்.

இதன் காரணமாக அவர்களுக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இதனை தொடர்ந்து சம்பவத்தன்று முருகேசன், நாகராஜ் ஆகியோர் சேர்ந்து மஞ்சுநாத்திடம் தகராறு செய்தனர்.

அப்போது ஆத்திரமடைந்த 2 பேரும் சேர்ந்து அரிவாளால் மஞ்சுநாத்தை வெட்டினர்.

இதில் தலை, கழுத்து, வலது கையில் வெட்டு விழுந்து காயமடைந்த அவர் சிகிச்சைக்காக ஓசூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து மஞ்சுநாத் தளி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து முருகேசன் மற்றும் நாகராஜை கைது செய்தனர்.