கோபி:
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கவுண்டன்புதுர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி 10-ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த சிறுமி திடீரென மாயமானார்.
இது குறித்து அவரது பெற்றோர் கோபிசெட்டிபாளையம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
போலீசாரின் விசாரணையில் கணபதி பாளையம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன், சிறுமியை கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை தேடி வந்தனர்.
இந்த நிலையில் இரவு ஈரோடு ரெயில் நிலையத்தில் சிறுவன் சிறுமியுடன் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் விரைந்து சென்று 2 பேரையும் மீட்டனர்.
பின்னர் போலீசார் சிறுமி மாயமான வழக்கை மாற்றி 17 வயது சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் சிறுவனை ஈரோடு சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவையில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.