சேலம்:
ஜார்கண்ட், பீகார், உத்தரகாண்ட் உள்ளிட்ட வட மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பலர் சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள மேட்டுப்பட்டி பகுதியில் தங்கி ஓட்டல் வேலை, தோட்டவேலை, மண்பாண்ட வேலை, பொம்மை விற்பனை உள்ளிட்ட பல்வேறு வேலைகள் செய்து வருகின்றனர்.
இங்கு ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தம்பதி புருஷாமுன்டா- விகாஷி (16) ஆகியோர் தங்கியிருந்து கூலி தொழில் செய்து வருகிறார்கள். இருவரும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த விகாஷி கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரசவத்திற்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்தார். நேற்று இரவு அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் பிரசவ வார்டில் நலமுடன் உள்ளனர். கணவர் உடனிருந்து இருவரையும் கவனித்து வருகிறார்.
16 வயது நிறைவடைவதற்குள் விகாஷியை புருஷாமுன்டா, திருமணம் செய்த விஷயம் குறித்து டாக்டர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரி போலீஸ் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீசார், புருஷாமுன்டாவிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.