உள்ளூர் செய்திகள்

அடிப்படை வசதிகள் கேட்டு உடுமலை அரசு கல்லூரி மாணவர்கள் `திடீர்' போராட்டம்

வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.கல்லூரி நிர்வாகம் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகின்றது.

உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு கலைக்கல்லூரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தநிலையில் கல்லூரியில் அடிப்படை வசதிகளான குடிநீர் குழாய், கழிப்பிடம் மற்றும் விளையாட்டு மைதானம் பராமரிப்பு இல்லாமல் உள்ளதாக கல்லூரி நிர்வாகத்திடம் மாணவர்கள் புகார் செய்தனர்.

ஆனால் சீரமைக்க நடவடிக்கை எடுக்காததால் இன்று காலை கல்லூரி மாணவர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து மாணவர்கள் கூறியதாவது:-

மாணவர்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதில் கல்லூரி நிர்வாகம் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகின்றது. எனவே இனியும் அலட்சியம் காட்டாமல் குடிநீர் மற்றும் கழிப்பிடம் வசதியை உடனே செய்து தர வேண்டும். இல்லாவிடில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT