மொழிப்போர் தியாகிகளுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தும் ஸ்டாலின் 
உள்ளூர் செய்திகள்

தேகங்களை தீக்கிரையாக்கி இந்தித் திணிப்பை எதிர்த்தவர்களுக்கு வீரவணக்கம்- முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

மொழிப்போர் தியாகிகளின் திருவுருவப் படங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

மாலை மலர்

சென்னை:

தமிழ் மொழிக்காக தங்களது உயிரை மாய்த்துக் கொண்ட தியாகிகளை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25-ம் தேதி மொழிப்போர் தியாகிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 

இந்நிலையில் இன்று மொழிப்போர் தியாகிகள் தினத்தையொட்டி கிண்டியில் உள்ள மொழிப்போர் தியாகிகள் மணிமண்டபத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தியாகிகளின் திருவுருவப் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

முதல்வர் ஸ்டாலினுடன் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது:-

"ஓடி வந்த இந்திப் பெண்ணே கேள்; நீ தேடி வந்த கோழையுள்ள நாடிதல்லவே” என முழங்கி, தேக்குமர தேகங்களை தீக்கிரையாகக் கொடுத்து இந்தித் திணிப்பை எதிர்த்த வீர மறவர்களுக்கு வீரவணக்கம். அனைத்தும் நமக்குச் சமம், ஆதிக்கம் எந்த உருவில் வந்தாலும் சமரசம் இன்றி எதிர்ப்போம். 

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார்.