குச்சனூர் கோவில் 
உள்ளூர் செய்திகள்

ஆடி முதல் சனிக்கிழமை குச்சனூர் சனீஸ்வரன் கோவிலில் பக்தர்கள் வழிபாடு

ஒவ்வொரு வருடமும் ஆடி மாதத்தின் சனிக்கிழமைகளில் சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். இந்த வருடம் ஆடி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு அதிகாலையிலேயே ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர்.

உத்தமபாளையம்:

தேனி மாவட்டம் குச்சனூரில் பிரசித்தி பெற்ற சனீஸ்வர பகவான் கோவில் உள்ளது. இது சிறந்த பரிகார ஸ்தலமாகவும் விளங்கி வருகிறது. ஒவ்வொரு வருடமும் ஆடி மாதத்தின் சனிக்கிழமைகளில் சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

அதன்படி இந்த வருடம் ஆடி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு அதிகாலையிலேயே ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். அவர்கள் அங்குள்ள சுரபி நதியில் நீராடி பின்னர் சனீஸ்வர பகவானை வழிபட்டனர்.

சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இதே போல் திண்டுக்கல் மலையடிவாரத்தில் சனீஸ்வர பகவானுக்கு தனி சன்னதி உள்ளது. இங்கு ஆடி மாதத்தில் அனைத்து சனிக்கிழமைகளிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும் அதன்படி இன்று ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.

சன்னதி முன்பு எள் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். முக்கிய நிகழ்ச்சியாக ஆடி 18-ம் தேதியன்று இங்கு சனீஸ்வர பகவானுக்கு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.