சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் நகராட்சி அலுவலகத்தில் பிரதம மந்திரி சாலை ஓர வியாபாரிகளுக்கு கடனுதவி திட்ட விழிப்புணர்வு மற்றும் விண்ணப்பங்கள் பெறும் நிகழ்ச்சி நடந்தது. நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன் தலைமை தாங்கினார்.
நகராட்சி கமிஷனர் சபாநாயகம், சமுதாய அலுவலர் பாலமுருகன், கட்டிட ஆய்வாளர் கஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஸ்டேட் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி உள்ளிட்ட வங்கி அதிகாரிகள் கலந்து கொண்டு சாலையோர வியாபாரிகளுக்கு கடன் உதவி திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தொடர்ந்து எவ்வாறு கடனுதவி பெறலாம்? என்ற வழிமுறைகளை விளக்கி கூறினர். மேலும் இதில் முதலில் பணம் பெற்றுக் கொண்டு முறையாக கட்டும் வியாபாரிகளுக்கு அடுத்தடுத்து கடன்கள் வழங்கப்படும் என தெரிவித்தனர். தொடர்ந்து வியாபாரிகளிடம் இருந்து கடன் விண்ணப்ப மனுக்கள் பெறப்பட்டது. இதில் கவுன்சிலர்கள், நகரா ட்சி பணியாளர்கள், வங்கி ஊழியர்கள், சாலையோர வியாபாரிகள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.