உள்ளூர் செய்திகள்

கேரளாவில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

தென்மேற்கு பருவமழை கேரளா பகுதிகளில் இன்று தொடங்கி உள்ளது.சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

சென்னை:

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

தென்மேற்கு பருவமழை கேரளா பகுதிகளில் இன்று தொடங்கி உள்ளது. மேலும் இது தென்தமிழக பகுதிகளிலும் பரவி உள்ளது.

அரபிக்கடலில் நிலைக்கொண்டுள்ள பிபோர்ஜோய் அதிதீவிரப் புயலாக வலுவடைந்து வடக்கு நோக்கி நகரும்.

வெப்ப சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.