லாரி, பொக்லைன் எந்திரங்களை சிறைப்பிடித்த பொதுமக்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்திய காட்சி. 
உள்ளூர் செய்திகள்

மண் திருட்டு லாரி, பொக்லைன் எந்திரங்களை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்

விதிமுறை மீறி 10 மீட்டருக்கு மேல் பள்ளம் தோண்டப்பட்டு மண்ணை அள்ளி செல்வதாகவும் கூறி கெச்சம்பட்டி, வெண்ணாம்பட்டி, செலவடை மேடு ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டுவந்து லாரிகள் மற்றும் எந்திரங்களை சிறை பிடித்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

மாலை மலர்

தாரமங்கலம்:

தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியம் செலவடை கிராமம் தோணிகத்தான் பள்ளம் என்ற இடத்தில் சுதந்திரதின விழாவை முன்னிட்டு அமிர்த குளம் அமைத்து அங்கு கொடியேற்று விழா நடத்தப்பட்டது. அதன்பிறகு அரசு விதிமுறைப்படி கல்வெட்டு வைக்கப்பட்டது.

தொடர்ந்து கடந்த 10 நாட்களாக சிலர் 10-க்கும் மேற்பட்ட லாரிகளை கொண்டு இரவு பகலாக மண் அள்ளி சென்றனர்.இந்நிலையில் நேற்று மாலை விதிமுறை மீறி 10 மீட்டருக்கு மேல் பள்ளம் தோண்டப்பட்டு மண்ணை அள்ளி செல்வதாகவும் கூறி கெச்சம்பட்டி .வெண்ணாம்பட்டி .செலவடை மேடு ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டுவந்து லாரிகள் மற்றும் எந்திரங்களை சிறை பிடித்தனர் .

இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இதுபற்றி காவல்துறை மற்றும் வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஜலகண்டபுரம் காவல் ஆய்வாளர் ஆனந்த்ராஜ், தாரமங்கலம் வருவாய் ஆய்வாளர் முருகேசன்.கிராம நிர்வாக அலுவலர் நாகலட்சுமி ஆகியோர் பொது–மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர் .

அரசு விதிமுறைப்படி அமைக்கப்பட்ட அமிர்த குளத்தில் அளவுக்கு அதிகமாக மண்ணை வெட்டி கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.