பரமத்தி வேலூர்:
நாமக்கல் வட்டாரத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை (அட்மா) திட்டத்தின் கீழ் பசுந்தாள் உரப்பயிர்கள் மற்றும் உயிர் உரங்கள் மூலம் மண்வள மேம்பாடு குறித்த விவசாயிகளுக்கான பயிற்சி சிலுவம்பட்டி கிராமத்தில் நடைபெற்றது. இதில், சிறப்பு பயிற்றுநர் துணை வேளாண்மை அலுவலர் (ஓய்வு) மாதேஸ்வரன் கலந்து கொண்டு, பசுந்தாள் எருவானது நுண்ணூட்ட சத்துகளை உறிஞ்சி தன்னுடன் வைத்து கொண்டு பயிருக்கு தேவைப்படும் போது எளிதில் கிடைக்க செய்வதன் மூலம் சத்துக்கள் விரயமாவதை தடுத்து நிறுத்த உதவுகிறது. எனவே அனைத்து விவசாயிகளும் தக்கை பூண்டு, கொளிஞ்சி, அகத்தி, சீமை அகத்தி, பில்லிப்பயறு, காராமணி போன்ற பசுந்தாள் உர பயிர்களை பயிரிட்டு பூக்கும் தருணத்தில் மடக்கி உழுது மண்வளம் பெருகி அதிக மகசூல் பெறலாம் என பயிற்சி வழங்கினார்.
வேளாண்மை அலுவலர் ரசிகபிரியா உயிர் உரங்கள் மண்ணில் உயிரியல் செயல்பாட்டை அதிகரிக்கிறது. இயற்கை வளத்தை தக்க வைக்கிறது. பயிர் வறட்சியை தாங்கி வளர உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கிறது. ரசாயன தழைச்சத்து, மணிச்சத்து உரங்கள் 25 சதவீதம் குறைவதால் சாகுபடி செலவு குறைகிறது என பயிற்சியளித்தார்.
உதவி வேளாண்மை அலுவலர் சதிஸ்குமார் வேளாண்மை துறையின் மானிய திட்டங்கள், பயிர்க் காப்பீடு திட்டம் மற்றும் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் பற்றி விவசாயிகளுக்கு விளக்கமளித்தார். அட்மா திட்ட வட்டாரத் தொழில்நுட்ப மேலாளர் ரமேஷ் மற்றும் உதவி தொழில் நுட்ப மேலாளர் கவிசங்கர் ஆகியோர் விவசாயிகளுக்கு உழவன் செயலி பயன்கள் குறித்து விளக்கமளித்தனர். இதில் சிலுவம்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.