தாமிரபரணியில் நடைபெறும் தூய்மை பணியை கலெக்டர் விஷ்ணு பார்வையிட்ட காட்சி. 
உள்ளூர் செய்திகள்

தாமிரபரணி ஆற்றில் சோப்பு, பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை

நெல்லை தாமிரபரணி ஆற்றில் சோப்பு, பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.குப்பை கழிவுகள், செடி, கொடிகள் அகற்றப்பட்டு நதி தூய்மைப்படுத்தப்பட்டு வருகிறது

நெல்லை:

தாமிரபரணி நதியை பாதுகாக்கும் பொருட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் நெல்லை நீர்வளம் என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டு நதியை சுத்தப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

பாபநாசத்தில் தொடங்கி மருதூர் அணை கட்டு வரை நதியின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகள், குப்பை கழிவுகள், செடி, கொடிகள் அகற்றப்பட்டு நதி தூய்மைப்படுத்தப்பட்டு வருகிறது. மொத்தம் 58 இடங்களில் நடத்தப்பட்டு வரும் இந்த தூய்மை பணியின் ஒரு பகுதியாக அருகன்குளம் காட்டு ராமர் கோவில் பகுதியில் இருந்து நாரணம்மாள்புரம் ஜடாயுதீர்த்தம் வரை நேற்று தூய்மைப்படுத்தும் பணி தொடங்கியது.

நெல்லை நீர்வளத்தின் கீழ் உழவார பணிக்குழுவினரால் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் நதியில் முட்புதர்களை அகற்றும் பணியை இன்று நாரணம்மாள்புரம் 4 வழிச்சாலை அருகே கலெக்டர் விஷ்ணு பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து தூய்மை பணி, படித்துறை களை சீரமைக்கும் பணி உள்ளிட்டவைகளை அவர் பார்வையிட்டார்.

பின்னர் அவர் கூறியதாவது:-

தாமிரபரணி ஆற்றில் 58 இடங்களில் தூய்மை பணி நடைபெற்று வருகிறது. நெல்லை நீர்வளம் திட்டம் மூலமாக கடந்த சில மாதங்களாக இந்த பணியானது நடைபெற்று வருகிறது.

தாமிரபரணி நதியை முழுமையாக தூய்மை படுத்துவதுதான் இதன் நோக்கம்.

குளிக்கும் தரத்தில் உள்ள இந்த நீரை குடிக்கும் தரத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

பொதுமக்கள் ஆற்றில் குளிக்கும்போது ரசாயனம், சோப்பு, மக்காத பொருட்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட உள்ளது.

இதற்கான நடவடிக்கை விரைவில் அமலுக்கு வரும். ஏற்கனவே நீர்நிலைகளில் லாரி, கார் உள்ளிட்ட வாகனங்களை சுத்தம் செய்வதற்கு தடை சட்டம் உள்ளது.

அதன்படி விரைவில் அந்தந்த நகராட்சி, பேரூராட்சி அதிகாரிகள் மூலமாக தாமிரபரணி நதியில் வாகனங்களை சுத்தம் செய்பவர்கள் மீது சட்ட ரீதியில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.